அதிர்ச்சி.. வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு ரயிலில் திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்களில் 5 பேர் வெப்பம் மற்றும் அனல் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
கடுமையான வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வட மாநில வானிலை மையங்கள் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தன. மேலும் மக்கள் அதிகளவு தண்ணீ பருக வேண்டும் என்றும் வெளியே செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
ஆன்மிக சுற்றுலா
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களுக்கு ரயிலில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். காசி, கயா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு ஆக்ராவில் இருந்து தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
5 முதியவர்கள் பலி
கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டியில் பயணம் செய்துள்ளனர். ஜான்சி என்ற இடத்தில் வந்த போது 5 பேருக்கு வெப்பத்தால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பச்சையா, பாலகிருஷ்ணன், தெய்வானை, கலாதேவி, சுப்பையா ஆகிய 5 முதியவர்கள் உயிரிழந்தனர்.
நாளை ஒப்படைக்கப்படும்
அவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்காக ஜான்சி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 5 பேரின் உடல்களும் நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 முதியவர்கள் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 48 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட வெப்பம் மற்றும் அனல் காற்றுக் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 முதியவர்களும் மரணடைந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி, சோகம்
இருப்பினும் பிரேத பரிசோதனை செய்த பின்னரே மரணத்திற்கான முழு காரணமும் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்மீக சுற்றுலா சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.