ஒரு வேளை சோறு இல்லாமல் பசியில் செத்துப்போன சோனியா - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
பசிக்கொடுமையால் ஐந்து வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் ஆக்ராவை அதிரவைத்துள்ளது. ஒருவேளை சோறு இல்லாமல் சிறுமி இறந்த பின்னர் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இப்போது மாறி மாறி உதவிகள் கிடைத்து வருகிறது.
லக்னௌ: கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஔவையார் பாட்டி பாடியிருக்கிறார். கொரோனா காலத்தில் பசியால் யாரும் மரணமடையக்கூடாது என்பதற்காக நவம்பர் வரை ரேசனில் இலவச அரிசி கோதுமை வழங்கப்பட்டாலும் ஆங்காங்கே பசி மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆக்ரா அருகே ஐந்து வயது சிறுமி பசிக்கொடுமையால் மரணமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள நாக்ல விதிசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவரது மனைவி ஷீலா தேவி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். வறுமையில் சிக்கித்தவித்தது இவர்களின் குடும்பம்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்து ஒருவேளை உணவிற்கே தவித்து வருகின்றனர். பசிகொடுமைக்கு சோனியாவின் குடும்பமும் தப்பவில்லை. பசியால் தவித்த சோனியா பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு உடனடி உதவியாக அந்த குடும்பத்திற்கு 50 கிலோ கோதுமை, 40 கிலோ அரிசி, 5 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்ளூர் மக்கள் அளித்து உதவி வருகின்றனர்.
இதுபற்றி தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், சோனியாவின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, உஜ்வாலா கேஸ் இணைப்பு, டிபி நோயாளியான தந்தைக்கு படுக்கை வசதி, இரண்டு பிள்ளைகளின் கல்விக்கான உதவி என அனைத்தையும் மளமளவென செய்து முடித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டித் தரவும் மாநில அரசு முன்வந்துள்ளது.
உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.. ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகர்ஜி!
உயிரிழந்த சிறுமியின் தந்தை பணியாற்றக் கூடிய நிலையில் இல்லை. அவரது மனைவி தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார். மகாத்மா காந்தி தேசிய ஊராக வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து வைத்துள்ளார். அந்தக் குடும்பத்திற்கு தொடர்ந்து மின்சார வசதி கிடைக்க உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். இதுவரை செலுத்தாமல் இருந்த ரூ.7,732 மின் கட்டணத்தை கார்ப்பரேட் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் வேறு ஏதாவது மன அழுத்தத்தில் இருக்கின்றனரா என்று ஆராய்ந்து உரிய உதவிகள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். சோனியாவின் வீட்டிற்கு சென்று அனைவருக்கும் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் மாவட்ட நிர்வாக அதிகாரி.
பசியால் வாடி உயிரிழப்பது எவ்வளவு பெரிய கொடுமை. இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதற்குள் குடிமக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டியது அரசின் கடமை. அந்த கடமை மறந்த அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய மனித உரிமை ஆணையம் பசிப்பிணிக்கு சோனியா உயிரிழந்தது பற்றி உத்தரபிரதேச மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.