'யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி ஓடும் நீர்'.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.. மீட்பு பணி தீவிரம்!
லக்னோ: யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை குறிக்கும் அளவை விட தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்று யமுனை ஆறு. இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி கிளேசியரில் இந்த ஆறு தொடங்குகிறது.
தொடர்ந்து இந்த யமுனை ஆறு, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.
ஆளுநரின் 8 அஸ்திரம்.. நேரடியாக களமிறங்கிய
யமுனை ஆற்றில் வெள்ளம்
யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இந்த ஆறு ஓடுகிறது. டெல்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. தற்போது வடமாநிலங்களில் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக யமுனை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் தொடர்ந்து நீரின் அளவு உயர்ந்து வருகிறது. மேலும் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் யமுனை ஆற்றில் தண்ணீரின் அளவு மேலும் உயரும் அபாயம் உள்ளது.
தயார் நிலையில் படகுகள், நகரும் பம்புகள்
இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யமுனை நதியின் நீர்மட்டம் 205 .33 மீட்டரை தாண்டியது. தொடர்ந்து அபாய அளவை தாண்டி நீர் ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்ட்டுள்ளனர். 34 படகுகள், நகரும் பம்புகள் ஆகியவற்றை மீட்பு பணிக்காக அதிகாரிகள் ஈடுபடுத்தியுள்ளனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரிக்க தேவையான அளவு குழுக்கள் நியமிக்கவும் பாதிக்கப்படக் கூடிய இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யமுனை நதியில் நீர்மட்டம் 206 மீட்டரை தாண்டினால் நிலைமை இன்னும் மோசமாகும். இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலையில் நீர்மட்டம் இன்னும் உயராலாம். இதனால் ஆற்றங்கரையோரம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வசிக்கும் மக்கள் பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
ஹரியானாவில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் இருக்கும் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 1.55 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 352 கன அடி நீர் வெளியேற்றப்படும். ஆனால், நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியதால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தலைநகர் டெல்லியை வந்து சேர வழக்கமாக மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும்.