உ.பியில் 3 முறை எம்எல்ஏ.. நடுரோட்டில் படுகொலை.. யோகிக்கு எதிராக திரும்பும் பிராமண அரசியல்!
லக்னோ: மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நில தகராறில் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் உத்தரப்பிரசேத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலத்தை அபகரிக்கும் கும்பல் ஆயுதங்களுடன் வந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா (75 வயது) மற்றும் அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா இதை எதிர்த்தனர். ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையம் அருகே இரு தரப்பு மோதலின் போது முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா அந்த கும்பல் கொடூரமாக தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தில் அவரது மகனையும் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கலிகாலம்.. சொத்து தகராறு.. அறந்தாங்கியில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகள்
சாலையில் போராட்டம்
முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ராவின் மரணத்திற்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கூடினர். அவரது சடலத்தை திரிகோலியா பேருந்து நிலையம் அருகே சாலையில் வைத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
நில விவகாரம்
மிஸ்ராவுக்கும் சமீர் குப்தா மற்றும் ராதேஷ்யம் குப்தா ஆகியோருடன் நில விவகாரத்தில் மோதல் இருந்து வந்துள்ளது இந்த மோதலின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நிகாசன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நிர்வேந்திர குமார் மிஸ்ரா. இரண்டு முறை சுயேட்சையாக வெற்றி பெற்றவர். ஒரு முறை சமாஜ்வாடி கட்சி சார்பில் வென்றுள்ளார். முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
போட்டிபோட்டு கண்டனம்
இந்த கொலை சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் யோகியின் ஆட்சியின் அவலம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
உயர்ஜாதியினரை இழுக்க
ஏற்கனவே விகாஸ் சிங் போலீசாரால் எண்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு பிராமண பிரபலமான நிர்வேந்திர குமார் மிஸ்ரா கொல்லப்பட்டிருப்பது உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களுக்கு எதிராக செயல்கள் நடைபெறுவதாக அங்கு அரசியல் வேகமெடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் உயர்ஜாதிகளை கவர்ந்திழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் வேளை
இந்நிலையில் பிராமண பிரபலங்கள் அடுத்தத்து கொல்லப்பட்டிருப்பதை அரசியல் ரீதியாக பாஜகவிற்கு எதிராக கடுயைமான பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக யோகி ஆதித்யாநாத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.