8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
லக்னோ: சுமார் எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த சோட்லால். இவரது நான்கு வயது சிறுவன் ஷிவா நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தான். காலை 7.30 மணியளவில் அங்கு மூடப்படாமல் இருந்த 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், 32 பேரைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை, 28 பேரைக் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவையும் சிறுவனை மீட்க்கும் பணிகளில் ஈடுபட்டன.
காலை 9 மணியளவில் தொடங்கிய சிறுவனை மீட்கும் பணி மாலை வரை தொடர்ந்தது. முதலில் 90 அடி ஆழத்தில் அந்தச் சிறுவன் சிக்கியுள்ளான் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அச்சிறுவனுக்கு ஆக்சிஜன், குளுகோஸ், பிஸ்கட் உள்ளிட்டவற்றை அளித்தனர்.
பிறகு loop techniqueஐ பயன்படுத்தி சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய மீட்புப் பணிகள் மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், அச்சிறுவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவனைக் கயிறு மூலம் மீட்கும் முறையே loop technique என்று அழைக்கப்படுகிறது.