குளிர் காலமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரி ஆகிடும்..அமைச்சர் விளக்கம்
லக்னோ: குளிர் காலங்களில் தேவை அதிகரித்து, பெட்ரோல் விலை உயர்வது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், குளிர் காலத்திற்குப் பின் விலை குறையும் என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ. 100ஐ நெருங்கி வருகிறது .இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,
மேலும், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சரக்கு சேவைகளும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை
இந்நிலையில், உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், விலையேற்றத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அவர் பேசுகையில், "சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வதால் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலம் முடிந்தவுடன் நிச்சயம் எரிபொருள் விலை குறையும்.
குளிர் காலம்
இது ஒரு சர்வதேச சிக்கல். தேவை அதிகமாக இருக்கும்போது எரிபொருட்களின் விலை உயரும். குளிர் காலங்களில் வழக்கமாக இது ஏற்படும். குளிர் காலம் முடிந்ததும் விலை மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடும்" என்றார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீது மத்திய அரசும் மாநில அரசும் தனி தனியாக வரி விதிக்கிறது. இத்துடன் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலையேற்றமும் இணைந்து கொள்வதால் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வட வட கிழக்கு மாநிலங்கள்
நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "அசாம் மாநிலத்தின் டிக்பாய் மற்றும் துலியாஜன் பகுதிகளில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் வளங்களில் சுமார் 18 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்தில் மட்டுமே அமைந்துள்ளது.
விலை குறையும்
அசாம், அருணாசல், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா ஆகியவை எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் நிறைந்த பகுதிகள். 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு ஆட்சி அமைத்த போது, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுகளுக்கு தேவையான குழாய் இணைப்பு, ஆய்வு, சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றின் உள்கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். இதனால் விரைவில் இறக்குமதி என்பது குறித்து எரிபொருள் விலையும் குறையும்" என்றார்.