உங்களுக்கு இதயமே இல்லையா... இப்படியா செய்வீங்க... கம்புகளால் டால்பினை அடித்துக் கொன்ற 3 பேர் கைது!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் டால்பினை காம்புகளால் அடித்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கயவர்கள் டால்பினை அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் இருந்து வெளிவந்த ஒரு வீடியோ பார்ப்போரை கலங்கடித்தது. அதாவது கங்கை நதியில் 4-க்கும் மேற்பட்டோர் ஒரு டால்பினை குச்சிகள் மற்றும் கம்பிகளால் கொடூரமாக தாக்கும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த குழுவினர் அந்த டால்பினை கம்புகள், ஆயுதங்களால் கொடூரமாக தாக்குகின்றனர். அந்த டால்பினில் இருந்து இரத்தம் வெளியேறியபோதும், கல் மனம் கொண்ட அந்த கொடூரர்கள் கோடரியால் டால்பினை வெட்டுகின்றனர். அங்கிருந்த சிலர் எந்த காரணமும் இல்லாமல் ஏன் அதைத் தாக்குகிறீர்கள் என்று கேட்டனர். ஆனாலும் அந்த பாவிகள் முடிவில் அந்த டால்பினை அடித்தே கொன்று விடுவதுபோல் இந்த வீடியோ அமைந்துளளது. இதனை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்த பிரதாப்கர் போலீசார் டால்பினை அடித்தவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதன்பேரில் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கங்கை டால்பின் ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் என்றும் டிசம்பர் 31 ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.