ஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் என்று உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னௌ: ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என்று உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்து அவர்களே அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம் என்று ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார் தகனம் செய்தனர்.
நான்கு பேர் கைது
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிரிழக்க காரணமான குற்றத்திற்காக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் என்ற 4 உயர்வகுப்பை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சை கருத்து கூறும் பாஜக தலைவர்கள்
இதற்கிடையில், இந்த வன்கொடுமை சம்பவத்தில் தற்போது ஜாதி, அரசியல் புகுந்தவண்ணம் உள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெண் மீது புகார்
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இவர் மீது 44 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார்.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்
இந்த செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்களிலும் செய்தி சேனல்களிலும் வெளியாகியுள்ளது. அதன் பின் தான் அந்த பெண் பிடிபட்டிருக்க வேண்டும். இது போன்ற பெண்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள் கரும்பு தோட்டங்களிலும், சோளம், தினை வயல்களிலும், புதர்கள், பள்ளங்கள் அல்லது காடுகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள் ஏன் நெல் அல்லது கோதுமை வயல்களில் உயிரிழந்து இறந்து கிடப்பதில்லை?
பெற்றோர்கள் கொலை
கரும்பு, சோளம், தினை போன்ற பயிர்கள் உயரமாக இருக்கும் அவற்றால் ஒரு நபரை மறைக்க முடியும். ஆனால் கோதுமை மற்றும் நெல் பயிர்கள் அல்லது நான்கு அடி உயரம் வரை மட்டுமே வளரும். குற்றம்சாட்டப்பட்ட ஆண் நபரில் ஒருவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம்.
ஆதாரம் எதுவும் இல்லை
இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்பதை உறுதிபடுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை.
விடுதலை செய்யுங்கள்
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் தொடர்ச்சியாக அவர்கள் மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகிவிடுவார்கள். இழந்த இளைஞர்களை யார் திருப்பித் தருவார்கள்? அரசாங்கம் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமா? இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா.