ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் ஹைகோர்ட்டில் இன்று ஆஜர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினர் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹத்ராஸ் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி போலீசாரே இரவோடு இரவாக எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்பிரீத்சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது.
Family members of #Hathras alleged gang-rape victim leave for Lucknow.
— ANI UP (@ANINewsUP) October 12, 2020
They will appear before Lucknow Bench of Allahabad High Court later in the day. pic.twitter.com/Slu1k5GUmW
இந்த பெஞ்ச் முன்பாக இன்றைய விசாரணையின் போது பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹத்ராஸில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் லக்னோ அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று பிற்பகல் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.