"அப்பா சம்மதத்துடன் தலித் பெண் உடலை எரித்தனர்".. அவசரம் அவசரமாக வீடியோ வெளியிட்ட பாஜக..!
லக்னோ: உபியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான தலித் பெண்ணின் சடலத்தை நடுராத்திரி 1 மணிக்கு ஏன் போலீசார் தகனம் செய்தார்கள் என்ற சர்ச்சை பெரிதாக வெடித்துள்ள நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன்தான் உடல் தகனம் செய்யப்பட்டதாக பாஜகவின் ஐடி பிரிவு மூலம் ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண், கடந்த 14 -ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்... 4 பேரும் உயர் ஜாதி இளைஞர்கள்.
பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளனர். உடல் முழுவதும் பெண்ணுக்கு எலும்பு முறிவுகள் பல இடங்களில் ஏற்படும் அளவுக்கு கொடூரமாக அடித்துள்ளனர்.. உண்மையை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கையும் வெட்டியுள்ளனர்.
புதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு
ஆபத்து
இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார். அந்தப் பெண்ணை ரோட்டோரமாக வீசி விட்டு அவர்கள் போய் விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.
சுடுகாடு
இதையடுத்து, பெண்ணின் சடலத்தையும் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று போலீசாரே எரித்ததாக சொல்லப்படுகிறது.. சுடுகாடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாம்.. செய்தியாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.. நள்ளிரவு 1 மணி அளவில், குடும்பத்தினரின் கதறலையும் மீறி எரியூட்டி விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஹத்ராஸ் எஸ்.பி விக்ராந்த் விர் சொல்லும்போது "எல்லா நடவடிக்கைகளும் அந்த பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது" என்றார்.
தலித் பெண்
தலித் பெண்ணின் மரணமும், அடக்கமும் இந்திய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளனர்.. இதனால் யோகி அரசுக்கு பெரும் நெருக்கடி சூழ்ந்துள்ளது.
ஹரியானா
இந்நிலையில்,பாஜகவின் ஹரியானா ஐடி பிரிவு தலைவர் அருண் யாதவ் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். அதில், இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கை அவரின் குடும்பத்தினரே செய்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும், இறந்த பெண்ணின் அப்பா மற்றும் சகோதரரின் சம்மதத்துடனேயே இந்த இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒரு வயதானவர் உட்பட கிராம மக்கள், இறுதி சடங்கு செய்வது போல அந்த வீடியோவில் காணப்படுகிறது.
தகனம்
ஒருபக்கம் பெண்ணின் பெற்றோருக்கே தெரியாமல் உடலை எரித்ததாக சொல்கிறார்கள்.. இன்னொரு பக்கம், அப்பாவை கட்டாயப்படுத்தி சடலத்தை தகனம் செய்ய வைத்ததாக சொல்கிறார்கள்.. மறுபக்கம் அப்பாவின் முழு சம்மதத்துடனேயே உடல் எரியூட்டப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.. இதற்கு நடுவில் இந்த வீடியோவும் வெளியாகி உள்ளதால், அதன் உண்மை தன்மை பற்றி எதுவுமே இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் நடுராத்திரி 1 மணிக்கு ஏன் உடலை அவசரம் அவசரமாக எரித்தனர் என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை.
|
குற்றச்சாட்டு
இதற்கிடையே, இன்னொரு தகவல் கூறப்படுகிறது. மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டால், அந்தப் பெண்ணை எந்த அளவுக்கு கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்றனர் என்ற ஆதாரம் கிடைத்து விடும் என்பதால்தான், உடலை வேகம் வேகமாக எரித்து விட்டதாகவும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.