ஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!!
லக்னோ: ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்னை இரவோடு இரவாக குடும்பத்தினருக்குக் கூட தெரியாமல் எரித்தது மனித உரிமை மீறல் என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வரைவு கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவரை உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
ஹத்ராஸ் பலாத்காரம்: படுகொலையான பெண் உடலை அவசரமாக எரித்தது மனித உரிமை மீறல்: ஹைகோர்ட் கண்டனம்
எரித்தது
கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கை நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ரஞ்சன் ராய் இருவரும் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், ''உங்களது பெண்ணுக்கு இதுபோன்று நடந்து இருந்தால், எரிப்பதற்கு அனுமதித்து இருப்பீர்களா என்று நீதிபதிகள் கடுமையாக போலீஸ் அதிகாரியை கேட்டு இருந்தனர்.
சட்டம் ஒழுங்கு
இந்த நிலையில் நேற்றைய விசாரணையில், ''பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுக்காமல், அவர்களது சம்மதம் இல்லாமல், சட்டம் ஒழுங்கு காரணத்தைக் காட்டி எரித்து, இறுதிச் சடங்கு செய்து இருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
குடும்பத்தினர்
இந்த நிமிடம் வரைக்கும் எங்களுக்கு ஏன் இவ்வாறு செய்யப்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை. ஏன் அந்தக் குடும்பத்தினரிடம் இறந்த பெண்ணின் உடலை அரை மணி நேரத்திற்குக் கூட கொடுக்கவில்லை. அவர்களது வீட்டில் வைத்து ஈமச் சடங்குகள் செய்து இருப்பார்கள். இதற்குப் பின்னர் அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ அவர்கள் தகனம் செய்து இருப்பார்கள். ஏன் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் எரிக்கப்பட்டது.
பொறுப்பு
இறந்தவரின் உடலை எரிப்பது என்பது முக்கிய சடங்காக கருதப்படுகிறது. இதற்கு சட்டம் ஒழுங்கை காட்டி அனுமதி மறுத்து இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இறந்த பெண்ணின் முகத்தைக் கூட அவரது குடும்பத்தினருக்கு காட்டவில்லை. அதுவும் அவசர அவசராமாக எரிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அடிப்படை மனித உரிமை மீறலாகும். இந்தப் பொறுப்புகளை தட்டிக் கழித்து இருப்பதற்கு, யார் பொறுப்பு ஏற்பது.
விசாரணை
எவ்வாறு குற்றத்திற்கு உள்ளானவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என்று அழைக்கப்படக் கூடாதோ, அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது நடவடிக்கைகளையும் விசாரணைக்கு முன்பு வேறு மாதிரி சித்தரித்து பேசக் கூடாது'' என்று காட்டமாக கேட்டு இருந்தனர்.
தலையிடல்
மேலும், ஹத்ராஸ் எஸ்பி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், ஏன் மாவட்டக் கலெக்டர் செய்யப்படவில்லை. நேரடியாக இந்த வழக்கு விசாரணையில் போலீஸ் ஏடிஜி பிரசாந்த் குமார் தலையிடவில்லை. இந்த வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என்று எவ்வாறு கூற முடியும்.
2013 விசாரணை
கடந்த 2013ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் ஆணின் விந்தணு இல்லை என்பதற்காக பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என்று கூற முடியாது என்று ஒரு வழக்கில் கூறப்பட்டு இருந்தது. இதையும் போலீஸ் நன்றாக அறியும் போன்ற பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியதாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளது.