என் மகன் வயசு... நாங்க இருக்கோம்... விவசாயி குடும்பத்திடம் உருகிய பிரியங்கா காந்தி
லக்னோ : கிட்டதட்ட என் மகன் வயது தான் என உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி உருக்கமாக பேசி உள்ளார்.
டெல்லியில் ஜனவரி 26 அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, உத்திர பிரதேச மாநிலம் ராய்பூரை அடுத்த திப்திபா கிராமத்தை சேர்ந்த நவ்ரீத் சிங் ( வயது 25) என்ற இளைஞரும் கலந்து கொண்டார். அப்போது டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நவ்ரீத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் சுட்டதாலேயே இவர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்தது. அவரது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் ஏதும் இல்லை எனவும் தெரிய வந்தது.
கட்சிகள் நிச்சயம் நோட்டாவுக்கு பயந்தாகனும்.. இத மட்டும் செய்யுங்க போதும்.. முன்னாள் தேர்தல் ஆணையர்
இந்நிலையில் உயிரிழந்த நவ்ரீத்திற்காக ராம்பூரில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நவ்ரீத்திற்கு 25 வயது.எனது மகனுக்கு 20 வயது. அவர்கள் தனியானவர்கள் இல்லை என்பதை அவரின் குடும்பத்தினருக்கு நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாடும், நாங்களும் உங்களுக்காக இருக்கிறோம் என்றார்.
காங்கிரஸ் கட்சியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே சமயம் ராஷ்டிரிய லோக்தல், சமாஜ்வாதி கட்சியினரும் இந்த கிராமத்திற்கு வந்து நவ்ரீத் சிங்கின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். ஆனால் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியின் இது போன்ற செயல்பாடுகள் நாடகம் என உத்திர பிரதேச அமைச்சர் மோக்சின் ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.