காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்.. இந்து மகா சபையை சேர்ந்த பெண், கணவர் கைது
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மகாத்மா காந்தியடிகளை கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் நாதுராம் கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார். இதனால் ஆண்டுதோறும் ஜனவரி 30-ஆம் நாள் காந்தியின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை நினைவுப்படுத்தும் சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்து மகா சபை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுண் பாண்டே துப்பாக்கியால் சுட்டார்.
அதோடு காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்து மகா சபையினரின் செயலை நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்தனர். இதையடுத்து காந்தியின் உருவபொம்மையை சுட்ட 13 பேர் மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டேவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் மத்திய பிரதேச முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சௌஹான், மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.