பாஜகவின் தடுப்பூசியை எப்படி நம்பறது... நான் போட்டுக்க மாட்டேன்... பரபரப்பை கிளப்பும் அகிலேஷ் யாதவ்
லக்னோ: பாஜக அரசை நம்ப முடியாது என்பதால், அவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசி தற்போது போடப் போவதில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு நேற்று அனுமதியளித்தது. இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகைகளும் நடைபெற்றன.
இதையடுத்து இன்னும் சில நாள்களில் மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தடுப்பூசியை நம்ப முடியாது
இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவிலுள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இப்போது நான் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன். பாஜக அரசை எப்படி நம்ப முடியும். மாநிலத்தில் நாங்கள் ஆட்சியமைக்கும் போது அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம். பாஜகவின் தடுப்பூசியை எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.
கைதட்டினால் கொரோனா போய்விடும்
தொடர்ந்து உபியை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்த அவர், "யோகி அரசு ஏன் இப்போது மட்டும் தடுப்பூசியைச் சேமிக்கத் தேவையான குளிர்சாதன மையங்கள் கட்டுகின்றது. தட்டுகளையும் கைகளையும் தட்டினாலும் மருத்துவமனைகளின் மீது ஹெலிகாப்டர்களை கொண்டு பூ தூவினாலும் கொரோனா போய்விடும் என்று இந்த அரசுதானே கூறியது" என்றார்.
அரசியலைத் தாண்டி அகிலேஷுக்கு ஒன்னும் தெரியாது
அகிலேஷ் யாதவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்த நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், "பாஜகவின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று அகிலேஷ் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இதைவிடத் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால் அவரைப் போன்ற ஒரு இளம் தலைவர் கொரோனா தடுப்பூசியையும் கட்சியையும் இணைத்துப் பேசுவது. அகிலேஷ் அரசிலை தாண்டி எதையும் சிந்திக்க மாட்டார் என்பதையே இது காட்டுகிறது" என்று பதிலடி கொடுத்தார்.
வரி இல்லை
அயோத்தியைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் ஒன்றுகூடி சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவை அளிக்கும் நிகழ்ச்சியேலேய அகிலேஷ் இந்தச் சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும், "2022 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியமைத்த பிறகு அயோத்தி மக்களிடம் இருந்து எவ்வித நகராட்சி வரிகளும் வசூலிக்கப்பட மாட்டாது. இது ராமர் பிறந்த இடம் ஆயிற்றே. இந்த அரசு நகராட்சி வரிகளைத் திரும்பப் பெறவில்லை என்றால் என்ன, எங்கள் அரசு திரும்பப் பெறும்" என்று கூறினார்.
வழக்குகள் திரும்பப் பெறப்படும்
தான் மிகவும் ஆன்மீகத்தில் நாட்டமுடையவன் என்றும் முதலமைச்சராக இருந்தபோது முதல்வர் இல்லம், அலுவலகம் ஆகியவற்றில் கோயில்களை அமைத்ததாகவும் அவர் கூறினார். மேலும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல்
மத்தியப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் வரும் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சார பணிகளை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போதே தொடங்கிவிட்டார்.