உ.பி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்.. அனைத்து நோய்க்கும் இலவச சிகிச்சை.. பிரியங்கா காந்தி உறுதி!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பிலும் பாஜக வெற்றி பெறும் என்று கூறுகிறது.
ஆனாலும் பா.ஜ.க.வுக்கு அதிருப்தி அலை வீசுவதால் இந்த முறையாவது பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி!
ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை
இதனால் காங்கிரஸ் இப்போதிருந்தே பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் அமைத்து வருகிறார். இந்த நிலையில் கட்சி உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துளளார்.
சுகாதார அமைப்பின் மோசமான நிலை
''உ.பி.யின் சுகாதார அமைப்பின் மோசமான நிலையை அனைவரும் பார்த்தனர். கொரோனா காலத்திலும், தற்போது காய்ச்சல் பரவும் காலத்திலும் அரசின் அலட்சியம் தெளிவாக தெரிந்தது. நல்ல மற்றும் மலிவான சிகிச்சையை உறுதி செய்வதற்காக, தேர்தல் அறிக்கைக் குழுவின் ஒப்புதலுடன், உ.பி.யில் எந்த நோய்க்கும் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது'' என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.
7 வாக்குறுதிகள்
உத்தரபிரதேசத்தில் இதுவரை காங்கிரஸ் 7 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி மற்றும் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று சில நாட்களுக்கு முன்பு யாத்திரையை தொடங்கி வைத்த பிரியங்கா காந்தி தெரிவித்தார். மேலும், கோதுமை மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500க்கும், கரும்புக்கு குவிண்டால் ரூ.400க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளுக்கு ஸ்கூட்டி.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்றும் இளங்கலை மாணவர்களுக்கு மின்னணு ஸ்கூட்டி. வழங்கப்படும் என்றும் ஏற்கனவே பிரியங்கா அறிவித்து இருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியில் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.