மொத்தம் 2000 பக்க தீர்ப்பு.. பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதுதான்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் லக்னோ நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பில், பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்றும், பாபர் மசூதியை இடித்தவர்கள் சமூக விரோதிகள் என்றும், பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயற்சி செய்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால் நாட்டில் அப்போது பெரும் வன்முறை வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட பாஜக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் ஒரு சில நிமிடங்களில் நூறறுக்கணக்கானோரால் பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு.. லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாறிய வரலாறு இது!
அத்வானி விடுதலை
நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும், பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி மற்றும் முரளி மனோகர் .ஜோஷி உட்பட 32 பேரையும் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி அவர்களை விடுவித்துள்ளது.
16 பேர் இறந்துவிட்டனர்
விடுதலை செய்யப்பட்ட 32 பேரில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முன்னாள் மத்திய மந்திரி ஜோஷி மற்றும் உமா பாரதி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் , கோவில் கட்டும் பொறுப்பில் உள்ள அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஆகியோரும் அடக்கம் ஆகும். 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில். அதில் விசாரணையின் போதே 16 பேர் இறந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, 351 சாட்சிகளையும் 600 ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தது.
நீதிமன்றம் என்ன சொன்னது
இன்றைய தீர்ப்பின் போது அத்வானி (92), ஜோஷி (86), உமாபாரதி (61), கல்யாண் சிங் (88), நிருத்யா கோபால் தாஸ், சதீஷ் பிரதான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர். லக்னோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்றும், பாபர் மசூதியை இடித்தவர்கள் சமூக விரோதிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ நிரூபிக்கவில்லை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை.
அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ நிரூபிக்கவில்லை
சிபிஐ வழங்கிய வீடியோ ஆதாரங்களில் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.
சிபிஐ வழங்கிய ஆதாரங்களில் இருந்த ஒலி,ஒளிப்பதிவுகள் தெளிவாக இல்லை
தடுத்தார்கள்
பாபர் மசூதி இடிப்பை குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள் தூண்டினார்கள் என்பதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயற்சி செய்தார்கள்
பாபர் மசூதி இடித்தவர்கள் சமூக விரோதிகள்" என்று கூறப்பட்டுள்ளது.