ரூ.2,700 பணத்துக்காக அநாதை சடலத்தை குப்பையுடன் எரித்த காவலர்.. மரித்த போன மனிதநேயம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆதரவற்ற சடலத்தை டயர், குப்பை கொண்டு காவலர் ஒருவர் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் தான் இந்த மனித தன்மையற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் தான்.. ஆதரவற்ற சடலம் ஒன்றை பழைய டயர்கள், குப்பைகள் கொண்டு எரித்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோ எப்படியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் மனித தன்மையற்ற இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை எஸ்பி சைலேஷ் குமார் பாண்டே கூறும்போது, ஆதரவற்ற சடலங்கள் மூன்று நாட்கள் பாதுகாக்கப்படும். அதற்குள் அவற்றின் சொந்தங்கள் யாராவது வந்த சடலத்தை கேட்டால் ஆவணங்கள் சரி பார்ப்புக்கு பிறகு சடலம் ஒப்படைக்கப்படும்.
இல்லை என்றால்அரசாங்கமே சடலத்துக்கு இறுதி சடங்குகள் செய்ய 2,700 ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அதில் 2000 ரூபாய் ஈம காரியங்கள் செய்ய பயன்படுகிறது. மேலும் 400 ரூபாய் போக்குவரத்து செலவுக்கு பயன்படுகிறது.
ஆதரவற்ற சடலம் என்பதற்காகவே, சடலத்தை தூக்கி வீசுவது அவர்களுக்கு செய்யப்படும் அவமரியாதை. அதை தடுக்கவும், தவிர்க்கவும் மத்திய அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.
இறந்தவர்களின் ஆத்மா அமைதியுற வேண்டும். ஆதரவற்ற சடலத்தை அவமதிக்கும் காவலர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.