ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
லக்னோ: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் முஸ்லீம் மனுதாரர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஞானவாபி மசூதி வழக்கு: யார் மனு மீது முதலில் விசாரணை? வாரணாசி கோர்ட் இன்று முடிவு!
ஆய்வு
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், வீடியோ உடன் கூடிய ஆய்வு நடத்தத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தடை கோரி வழக்கு
அதன்படி கடந்த வாரம் வீடியோ உடனான ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கக் கோரி மசூதி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மூத்த நீதிபதி ஏ கே விசேவேஷ் இன்று விசாரணை செய்ய உள்ளார். மேலும், வீடியோ உடனான ஆய்வுக்கு இரு தரப்பினரும் ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனை இருந்தால் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
மசூதியில் படமெடுப்பது என்பது இது நாட்டில் எந்த வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதைத் தடுக்கும் 1991ஆம் ஆண்டின் சட்டத்தை மீறுவதாக மசூதி சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பான வழக்கில், இந்த பிரச்சனையின் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஞானவாபி வழக்கை மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நீதிபதிக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவலிங்கம்
ஞானவாபி மசூதியின் ஆய்வுக்கு வித்திட்ட மனு சரியானதா என்பது குறித்து முன்னுரிமை அளித்த முடிவு செய்யுமாறும் மாவட்ட நீதிபதியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. "சிவலிங்கம்" கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மசூதியைப் பாதுகாக்கவும், முஸ்லிம்கள் நமாஸ் செய்ய அனுமதிக்கவும், மே 17ஆம் வழங்கிய தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
மே 30 முதல்
ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் முஸ்லிம்கள் நுழைவதைத் தடை செய்யக் கோரிய தனி மனு புதன்கிழமை சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து வாரணாசியில் உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு வரும் மே 30ஆம் தேதி முதல் விசாரணைக்கு வருகிறது. கடந்த வாரத் தொடக்கத்தில், ஹிந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ எடுக்கப்பட்ட சமயத்தில் 'சிவலிங்கம்' கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர்.
Recommended Video
விளக்கம்
அதேநேரம் இதை மறுத்த மசூதி கமிட்டி உறுப்பினர்கள், வஸூகானா நீர்த்தேக்கத்தில் உள்ள நீரூற்றின் ஒரு பகுதி என்று விளக்கம் அளித்திருந்தது.. நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மே 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வீடியோ உடன் கூடிய ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், அந்த ஆய்வின் அறிக்கை மே 19ஆம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.