அடுத்தடுத்த ரெய்டுகள்.. மாயாவதி - அகிலேஷ் கூட்டணிக்கு செக்.. என்னதான் நடக்கிறது உ.பியில்?
லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்க பிரிவினர் கடுமையான சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
லக்னோ: லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்க பிரிவினர் கடுமையான சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. இந்த தேர்தலில் 80 தொகுதிகளை கொண்டு இருக்கும் உத்தர பிரதேசம் அதிக முக்கியத்துவத்தை பெற்று இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களே லோக்சபாவில் அதிக இடங்களை பெற முடியும்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருபெரும் அரசியல் தலைவர்களான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தற்போது அடுத்தடுத்த அமலாக்க பிரிவு சோதனைகளில் சிக்கி இருக்கிறார்கள்.
முதலில் சோதனை
கடந்த வாரம் லக்னோவில் அமலாக்க பிரிவு மூலம் நடத்திய சோதனைதான் முதல் சோதனை ஆகும். மொத்தம் 14 இடங்களில் அமலாக்க பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அகிலேஷ் யாதவின் 2012-2017 சமாஜ் வாதி ஆட்சியில் நடந்த சுரங்க ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்த சோதனை நடந்தது. இதில் பல அகிலேஷுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடந்த சோதனை ஆகும்.
இப்போது சோதனை
அதேபோல் இன்று தற்போது மீண்டும் அமலாக்க பிரிவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 1400 கோடி ரூபாயிலான நினைவிட ஊழல் வழக்கில் இந்த சோதனை நடைபெறுகிறது. இந்த ஊழல் 2007-2012க்கு இடையில் பகுஜன் சமாஜின் மாயாவதியின் ஆட்சியின் கீழ் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தற்போது மாயாவதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடக்கிறது.
முக்கியமான நபர்கள்
இந்த சோதனை நடந்த இடங்கள் எல்லாம் முழுக்க முழுக்க அகிலேஷ் மற்றும் மாயாவதிக்கு நெருக்கமான இடங்கள் ஆகும். இதில் அதிகம் சிக்கி இருப்பது அகிலேஷ்தான் என்று கூற வேண்டும். அவரின் சமாஜ்வாதி கட்சியில் இருக்கும் முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், அவரின் நெருங்கிய உறவினர்களின் வீடுகளில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
தேர்தல் வருகிறது
தேர்தல் வர இருக்கும் நேரத்தில் இந்த சோதனை நடப்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. சரியாக அகிலேஷ், மாயாவதி குறி வைக்கப்பட்டு இருப்பது அரசியல் ரீதியாக பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதேபோல் இரண்டு கட்சியிலும் தேர்தல் பணியாற்றும் நபர்கள்தான் அதிகம் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே கணிப்பு
இதுவரை வந்த தேர்தல் கருத்து கணிப்புகளின்படி மாயாவதி - அகிலேஷ் கூட்டணிதான் உத்தர பிரதேசத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களின் கூட்டணி 50+ இடங்களை பெறும் என்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அங்கு அமலாக்க துறை சோதனை நடப்பது பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.