அதிகாலையில் விடுதலையான டாக்டர் கபீல் கான்.. ராமாயணத்தை குறிப்பிட்டு பரபர பேச்சு
லக்னோ: சி.ஏ.ஏ-க்கு (குடியுரிமை திருத்த சட்டம்) எதிராக பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தரபிரதேச மருத்துவர் கபீல் கான் இன்று அதிகாலை மதுராவில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மருத்துவர் கபீல் கானை சட்டவிரோதமாக உத்தர பிரதேச அரசு காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அலகபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மருத்துவரின் பேச்சு வெறுப்பையோ அல்லது வன்முறையையோ எந்த வகையிலும் ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அப்போது கூறியது.
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய கோரக்பூரைச் சேர்ந்த டாக்டர் கபீல் கான் மீது சி.ஏ.ஏ-க்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு தொடரப்பபட்டது. இதன் காரணமாக மருத்துவர் ஜனவரி 29 அன்று கைது செய்யப்பட்டார்.
கஃபீல் கானை உடனே விடுதலை செய்யுங்கள்.. என்எஸ்ஏவை நீக்குங்கள்.. அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு!
என்ன வழக்கு
மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாக டாக்டர் கபீல் கான் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கான கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு மதுராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
டாக்டர் கான் கைது
இதற்கிடையே 2017 ஆம் ஆண்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கோரக்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதற்காக டாக்டர் கான் இடைநீக்கம் செய்யப்பட்டார், கைது செய்யப்பட்டார் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் உத்தரப்பிரதேச அரசு அதை மறுத்துள்ளது.
அலிகார் பல்கலை பேச்சு
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், டாக்டர் கபீல் கானின் சார்பில் அவரது வழக்கறிஞர் மனோஜ் குமார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட தடுப்பு காவலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் கபீல் கான் பேசியதாக கூறப்பட்ட உரையின் சிடி நகல் இருப்பதாக கூறினார்கள். "ஆனால் சிறையில் இருக்கும் கானுக்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. எனவே அவருக்கு எதிரான அடிப்படை குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து ஒரு போதும் கண்டுபிடிக்கவில்லை" என்று கூறினார்.
உடனே விடுவிக்க வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் மருத்துவர் கபீல் கானை சட்டவிரோதமாக உத்தர பிரதேச அரசு காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மருத்துவர் கபீல்கானின் பேச்சு வெறுப்பையோ அல்லது வன்முறையையோ எந்த வகையிலும் ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது. மேலும், டாக்டர் கபீல் கான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நெகிழ்ந்த கான்
இதையடுத்து மதுரா சிறையில் இருந்து இன்று அதிகாலை கபீல் கான் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக சிறையில் இருந்து வெளிவந்த கபீல்கான் கூறுகையில் " சிறந்த உத்தரவை வழங்கிய நீதித்துறைக்கு நன்றி. இந்த உத்தரவின் மூலம் எனது பேச்சு வன்முறையைத் தூண்டுவதல்ல என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது ... கடைசியாக என்னை சந்தித்த எஸ்.டி.எஃப் குழு என்னை மும்பையில் இருந்து மதுராவுக்கு அழைத்து வந்தபோது என்னை எண்கவுண்டர் செய்யவில்லை.
ராஜ் தர்மம்
"ராமாயணத்தில், ராஜா (ராஜா) 'ராஜ் தர்மத்திற்காக' செயல்பட வேண்டும் என்று மகர்ஷி வால்மீகி கூறியிருந்தார். உ.பி.யில், 'ராஜா' 'ராஜ் தர்மம்' செய்யவில்லை, ஆனால் 'பால் ஹத்' செய்கிறார் ( பிடிவாதமாக சிறுபிள்ளைத்தனமான காரியங்களை செய்கிறார்)" என்றார்.
உருகிய தாயார்
நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சிறை அதிகாரிகள் மருத்துவரை மணிக்கணக்கில் விடுவிக்காத நிலையில் , அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தனர். இதனிடையே தான் நள்ளிரவில் விடுவித்தனர். டாக்டர் கானின் தாயார் நுஜாத் பர்வீன் நீண்ட காலத்திற்குப் பிறகு தனது மகனை "பார்க்க முடியும், தொட முடியும், தன்னுடன் மகன் உள்ளதை உணர" முடியும் என்று உணர்ச்சி பெருக்கிட்டார். "என் மகன் ஒரு நல்ல மனிதர், அவர் ஒருபோதும் நாட்டிற்கோ சமூகத்துக்கோ எதிரானவர் அல்ல என்றும் கூறினார்.