போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்
லக்னோ: தனது மகனுக்கு போலீஸ் காவல் குறைக்கப்பட்டது அவர் கொலையாக ஒரு காரணமாகிவிட்டது என்று சுட்டுக் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான கமலேஷ் திவாரி, பிறமதங்கள் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்ததால் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு நடைபெற்றபோது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இந்த சட்டத்தில் அவரை சிறையில் அடைத்தது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கமலேஷ் திவாரி அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இனிப்பு கொண்டு வருவதைப் போல ஒரு அட்டைப் பெட்டியை கொண்டுவந்து, அதற்குள் துப்பாக்கியை வைத்து கொலையாளிகள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி விட்டனர்.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், முகமது முப்தி, இமாம் மவுலானா அன்வாருல் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கமலேஷ் குமாரின், குசும் திவாரி, உத்தரப் பிரதேச அரசு மெத்தனமாக இருந்துவிட்டதாக கூறியுள்ளார். 'இந்தியாடுடே' டிவி சேனலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு கமலேஷுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது.
அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின்போது எனது மகனுக்கு சுமார் 17 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்ததும் இந்த எண்ணிக்கையை 8 என்ற அளவில் குறைத்தார். பிறகு, வெறும் நான்கு பேராக குறைத்து விட்டார்.
அதில் இரண்டு பேர் எனது மகன் எங்கே சென்றாலும் அவருடன் காவலுக்கு செல்வார்கள். இன்னும் இரண்டு பேர் அலுவலகத்தில், பாதுகாப்புக்காக உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், எனது மகன் கொலை செய்யப்பட்ட அன்று நான்கு போலீசாரும் பணியில் இல்லை. இப்போது சில அப்பாவிகளை, கைது செய்துவிட்டு கொலை வழக்கை முடித்து விட்டதாக போலீசார் தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.