மதமாற்றம் செய்வதாக எழுந்த புகார்.. சிக்கலில் ஐஏஎஸ் அதிகாரி ?
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மதமாற்றம் செய்வதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
லக்னோ: ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், மதமாற்றம் செய்வதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணம் என்ற பெயரில் பெண்கள் சட்டவிரோத மதமாற்றம் செய்யப்படுவது அதிகரித்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டவிரோத மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்டன.
உத்தரபிரதேசத்தில் இது தொடர்பான சட்டவிரோத மதமாற்ற அவசர சட்டம் 2020 என்ற சட்ட வரைவு உருவாக்கப்பட்டு, அதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதலும் அளித்திருந்தது.. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் தந்து, கட்டாய மதமாற்றம் செய்தால் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநரும் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இதே உத்தரபிரதேசத்தில் வேறு ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கான்பூரில் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது புகார் கிளம்பி உள்ளது. அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பெயர் இப்திகருதீன்.. இவர்தான் இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... மத் மந்திர் என்ற ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய துணைத் தலைவர் பூபேஷ் அவஸ்தி என்பவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
கான்பூரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கலந்து கொண்டுள்ளார்.. அந்த நிகழ்ச்சியில் தரையில் சிலர் உட்கார்ந்துள்ளனர்.. அவர்களிடம் ஐஏஎஸ் அதிகாரி, மத மாற்றம் குறித்து பேசுவதாக கூறப்படுகிறது. அதேசமயம், அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை...
ஆனால், இப்த்கருதீன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதன் நன்மைகளை பற்றி எடுத்துரைப்பதாகவும், அவர் பேச்சை அங்குள்ளோர் உற்று கவனிப்பதாகவும் புகார் கிளம்பி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதையடுத்து, இதை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இது குறித்து உண்மைதன்மையை கண்டறிந்து ரிப்போர்ட்டாக 7 நாட்களுக்குள் தர சமர்ரப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.