உன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து
லக்னோ: உன்னாவ் பெண் பலாத்கார சம்பவத்தை அடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து செய்யப்பட்டன.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அந்த பெண் தனக்கு 16 வயதாக இருந்த போது குல்தீப்பிடம் வேலை கேட்டு சென்றதாகவும் அப்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.
இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன்பு போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினர்கள் இருவர், வழக்கறிஞருடன் ரேபரேலிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அந்த பெண்ணின் இரு உறவினர்களும் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் குல்தீப் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் குல்தீப்புக்கு வழங்கப்பட்ட ஆயுத உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. பாரல் ரக துப்பாக்கி, ஒரு துப்பாக்கி, ரிவால்வர் ஆகியன பயன்படுத்த உரிமம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.