உன்னாவ் பலாத்கார குற்றவாளி குல்தீப் செங்கார்.. எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம்
லக்னோ: உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக நிர்வாகி குல்தீப் சிங் செங்கார் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது இளம் பெண்ணை முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் கடத்தி பலாத்காரம் செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து எம்எல்ஏ குல்தீப் சிங்கை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணும் உறவினர்கள் சிலரும் ரேபரேலி சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை பார்க்க சென்றார்கள்.
அப்போது இவர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கிறஞர் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். மற்ற இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து வழக்கு உள்பட 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பின் கோரிக்கையை ஏற்று டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ மற்றும் எம்எல்ஏ தரப்பு ஆகிய இருதரப்பு வாதங்களும் டிசம்பர் 9ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பளித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி குல்தீப் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் 20ம் தேதி செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதன் காரணமாக கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங் செங்கார் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, உன்னாவோவில் உள்ள பங்கர்மாவ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கர், டெல்லி நீதிமன்றம் தண்டித்ததைத் தொடர்ந்து விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.