வன்கொடுமைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை.. யாரா இருந்தாலும் விடக் கூடாது.. குஷ்பு ட்வீட்
சென்னை: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் காட்டாமல் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி.யில் 50 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த விவகாரத்தில் பாஜக உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. மிகவும் கொடூரமான முறையில் இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
படான் மாவட்டத்திலும் ஈரக்குலையே நடுங்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய 50 வயதுடைய பெண் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
கோயில் பூசாரி
இவர் திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு காரில் கோயில் பூசாரியும் அவரது சீடர்கள் 2 பேரும் அழைத்து வந்து விட்டனர். ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்த நிலையில் அழைத்து வந்தனர். அப்பகுதியினர் கேட்ட போது அந்த பெண் கிணற்றில் விழுந்துவிட்டதாகவும் அவரை 3 பேரும் காப்பாற்றியதாகவும் சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
கணவர்
இதையடுத்து அந்த பெண்ணை அவரது கணவரும், மகனும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது காரில் இருவரிடமும் அந்த பெண் சில உண்மைகளை சொல்லிவிட்டு இறந்துவிட்டார். அந்த பெண் கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் கோயிலுக்கு மாலை 5 மணியளவில் சென்றுள்ளார்.
பூசாரி
அப்போது அவரை கோயிலுக்குள்ளேயே பூசாரியும் சீடர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியாமல் இருக்க அவரது பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மொத்தத்தில் அந்த இடத்தையே சிதைத்துள்ளனர்.
விலா எலும்பு
மேலும் அந்த பெண்ணின் விலா எலும்புகளையும் தப்பி ஓடாதபடி கால்களையும் உடைத்துள்ளனர். மேலும் நுரையீரலை குத்தி கிழித்துள்ளனர். கோயிலில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து சிறிதும் ஈவு இரக்கம் இன்றி மிருகத்தனமாக தாக்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டித்த குஷ்பு
நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகமோ, உத்தரப்பிரதேசமோ எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேணடும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.