ஒரு குட்டிக் கட்சியையும் விடாதீங்க.. வளைச்சுப் பிடிங்க.. அதிரடியில் உ.பி. காங்கிரஸ்!
லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுவிட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பெரும் போரே நடத்தி வருகின்றன. இதற்காகவே இந்த தேர்தலில் இருதுருவங்களாக இருந்துவந்த சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றோடொன்று கை கோர்த்துள்ளன.
காங்கிரசோடு இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு அவை இரண்டும் கூட்டணி அமைத்து விட்டன. இந்நிலையில் உ.பி.யில் அதிரடி காட்ட நினைத்த காங்கிரஸ் பிரியங்காவை களம் இறக்கியுள்ளது. பிரியங்கா வந்த பிறகு உ.பியில் நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. அம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள தலித் மக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
அகிலேஷ் யாதவ் கூட கூட்டணியை மறு பரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் செய்திகள் உண்டு. ஆனால் அவர் மாயாவதியுடன் அதன் பிறகு காங்கிரசை சேர்த்துக் கொள்வது குறித்து எதுவும் பேசவில்லை. அதே வேளையில் காங்கிரசுக்காக அவர்கள் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடாமல் இருப்பது அவர்களிடையே உள்ள மறைமுக கொடுக்கல் வாங்கலை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்
இந்நிலையில் உ.பி.யில் காங்கிரஸ் சின்னஞ்சிறு கட்சிகளோடு கூட்டணி வைப்பது அந்தக் கட்சிகளை வளர்த்து விடுவதாகவே அமையும் என தனியார் நிறுவன புள்ளி விவரம் ஒன்று கூறியது. இதனால் அங்குள்ள சிறிய கட்சிகளை காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது. ஆனால் இப்போது பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உ.பி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் முலாயம்சிங் யாதவின் சகோதரருமான ஷிவ்பால் சிங் யாதவ் இப்போது காங்கிரசுடன் நெருக்கத்தில் உள்ளார். அவர் தனது கட்சியான பிரகதீஷல் சமாஜ்வாதி லோகியா கட்சி காங்கிரசோடு கூட்டணி அமைக்க விரும்புகிறார். அதோடு கேசவ் தேவ் மவுரியாவின் மஹான் தளம், முகம்மது அயூபின் அமைதி கட்சி ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு வங்கியை வைத்திருக்கின்றன. இவற்றில் கேசவ் தேவ் மவுரியாவின் மஹான் தளம் கட்சியோடு பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசின் தலைவர்கள் முதற்கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மீதமுள்ள கட்சிகளோடும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். விரைவில் கூட்டணி அறிவிப்புகள் வெளிவரும் சூழல் நிலவுவதாக உ.பி காங்கிரசார் கூறுகின்றனர். அதோடு இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அப்னா தளம், பாரதிய சமாஜ் ஆகிய கட்சிகளும் காங்கிரசோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் அப்னா தளம் கட்சியின் தலைவர் அனுப்ரியா படேல் மத்திய இணை அமைச்சராகவும், பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ராஜ்பரின் சுகல்தேவ் உ.பி மாநில அமைச்சராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.