ராகுல், பிரியங்கா காந்தியை வெளுவெளுவென வெளுத்த அகிலேஷ் யாதவ்!
லக்னோ: பாஜகதான் தங்களது கட்சியை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு எதிராக கை கோர்க்க வேண்டிய சூழல் வரலாம் என்பதால் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் மூன்றும் அடித்துகொள்வது போல் அடித்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகின்றன.
இதனிடையே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை விமர்சித்திருக்கிறார். அதில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை தலா ரூ.10 கோடிக்கு விலை பேசும் பாஜக..மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
பிரியங்காவின் பொய்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இதை நாங்கள் நம்ப முடியாது. எந்த ஒரு அரசியல் கட்சியும் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தாது. காங்கிரஸ் கட்சியும் உத்தரப்பிரதேசத்தில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தவும் இல்லை. காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
பிரதமர் வேட்பாளரா முலாயம்?
எங்களது கூட்டணியானது நாட்டுக்கு ஒரு புதிய பிரதமரை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பின்னர் யார் பிரதமர் என்பது குறித்து முடிவு செய்வோம். முலாயம்சிங்கும் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை.
ராகுல் கருத்துக்கு கண்டனம்
சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணியை பாஜக இயக்குவதாக ராகுல் காந்தி கூறுவது கண்டனத்துக்குரியது. அதேபோல் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் பி டீமும் அல்ல. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே கொள்கை உடையவை. இரண்டுமே சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய ஏஜென்சிகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றன. நாங்கள் தனித்த அரசியல் கட்சிகள். உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வியை எங்களது கூட்டணி உருவாக்கித் தரும். பாஜகவின் கேடுகெட்ட அரசியலுக்கு நாங்களே முற்றுப்புள்ளி வைப்போம்.
பாஜகவுக்கு எதிர்ப்பு
தேசத்தின் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை; ஒவ்வொரு நாளும் எல்லையிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல்களிலும் வீரர்களை பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் பாதுகாப்பு குறித்து எப்படி பாஜக பேசுகிறது?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.