உபியை அலற வைக்கும் லவ் ஜிகாத்.. கடும் நடவடிக்கை எடுக்க.. போலீஸுக்கு யோகி உத்தரவு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாதி அதிகரித்து வருவதால், இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லவ் ஜிகாதி என்பது ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வது. குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. லவ் ஜிகாதி மூலம் திருமணம் முடிந்து மதம் மாற்றம் செய்வது என்ற குற்றச்சாட்டும், இதனால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்துப் பெண்களை மதம் மாற்றம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. .
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், மீரட், லக்கிம்பூர் ஆகிய இடங்களில் இதுபோன்று பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மதம் மாற்றம் செய்த பின்னர் திருமணம் செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாக புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் செய்தி தொடர்பாளர் மிருதயுஞ்ஜெய் குமார் கூறுகையில், ''மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லவ் ஜிகாதி நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு மூத்த உள்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யுக்திகள் தயாரிக்குமாறும், புதிய சட்டங்கள் இயற்றுமாறும் தெரிவித்துள்ளார்'' என்றார்.
கூடுதல் உள்துறை அமைச்சர் அவனீஷ் குமார் அவஸ்தி அளித்திருக்கும் பேட்டியில், ''இது ஒரு சமூக பிரச்சினை. அதைத் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாங்களும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். தற்போது சமூக ஊடகங்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதன் மூலமும் செய்தி பரவுகிறது.
2024 தேர்தலில்.. ராகுல் காந்தியால்.. காங்.குக்கு வெற்றி தேடித் தர முடியாது.. அதிருப்தி தலைவர்!
பல்வேறு குற்றவாளிகள் மீது இதுதொடர்பாக வழக்குகள் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பெண்களின் குடும்பத்திற்கு பண ரீதியில் உதவிகள் வழங்க வேண்டும்'' என்றார்.
அதேசமயம் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படாது என்றும், தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய சட்டங்களே போதும் என்றும் தெரிவித்துள்ளார். பெண்கள் திருமணத்திற்கு முன்பு கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுகின்றனரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.