பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை- லக்னோ கோர்ட் அதிரடி தீர்ப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இன்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.
1992 டிசம்பர் 6-ந் தேதி 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால்தான் இந்தியாவில் மதமோதல்கள் வெடித்தன.
இந்த பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்குகள் 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 2001-ல் அத்வானி உள்ளிட்டோர் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை உறுதி செய்தது.
அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 2017-ல், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டது. பல்வேறு கால அவகாசங்களுக்குப் பின்னர் இந்த வழக்கு தீர்ப்பு கட்டத்தை எட்டியிருக்கிறது.
லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு
லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பு வழங்கினார். 28 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
17 பேர் மரணம்
மொத்தம் 49 பேர் மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் 17 பேர் விசாரணை காலத்திலேயே காலமாகிவிட்டனர். இதனால் மொத்த 32 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
351 பேர் சாட்சிகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் மரணம் அடைந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் பால்தாக்கரே, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், டால்மியா உள்ளிட்டோர். இவ்வழக்கில் மொத்தம் 351 சாட்சிகள், 600 ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது.
அனைவரும் விடுவிப்பு
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை நாடு முழுவதும் வரவேற்று பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.