இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்
லக்னோ: ஹெல்மெட் அணியாமல் பஸ்ஸை இயக்கியதாக பஸ் டிரைவருக்கு ரூ 500 அபராதம் விதித்த சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவை சேர்ந்தவர் நிரன்கர் சிங். இவர் நொய்டாவில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பேருந்தை இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரிடம் 50 பஸ்கள் உள்ளன. இந்த நிலையில் இவரது நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பேருந்தை இயக்கியதாகவும் அதற்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த 11-ஆம் தேதி ஆன்லைன் மூலம் சலான் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் நிரன்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார். இந்தியா முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நிரன்கர் சிங் கூறுகையில் எங்கள் மீது தவறிருந்தால் அபராதம் செலுத்த தயார். ஆனால் போக்குவரத்து துறையின் அலட்சியம் காரணமாக தினம் ஏராளமான சலான்கள் வருகின்றன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நாடவுள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பஸ்ஸின் மற்றொரு டிரைவர் சீட் பெல்ட் அணியவில்லை என கூறி 4 முறை அபராதம் விதிக்கப்பட்டது.