ஆடம்பர காரை பறிமுதல் செய்து உல்லாச பயணம் சென்ற போலீசார்.. நடுவழியில் காருக்குள் நேர்ந்த கதி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இரு தரப்புக்கு இடையிலான சண்டையில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைக்க போன போலீஸ் அங்கு அவர்களிடம் இருந்து ஆடம்பர காரை தூக்கி சென்று உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அப்போது சுமார் 3 மணி நேரம் காருக்குள்ளேயே அடைப்பட்டு சிக்கிக்கொண்டார்கள்
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகாரின் பேரில் கோமதி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்கள்.,
அங்கு ஒருவழியாக பேசி இருதரப்புக்கும் இடையே பஞ்சாயத்து பேசி வைத்து ஒரு தரப்பை மிரட்டி அவர்களிடம் இருந்த ஆடம்பர் ரக கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
உல்லாச பயணம்
அதன்பின்னர் அந்த சொகுசு காரில் கோமதி நகர் போலீஸ் ஸ்டேசனில் உயர் அதிகாரியான பரமேந்திரா குமார் சிங் தன்னுடன் இரண்டு காவலர்களை அழைத்துக்கொண்டு லகீம்பூர் கிரி நோக்கி பயணம் செய்துள்ளார். அவர்கள் காரில் லக்னோவில் இருந்து 140 கி.மீட்டர் தொலைவுக்கு மேல் ஜாலியாக பயணித்துக்கொண்டிருந்தார்கள். கார் லகீம்பூர் கிரி மாவட்டத்தில் உள்ள நை பஸ்டி கிராமத்தில் சென்று கொண்டுடிருந்தது.
தவித்த போலீசார்
அப்போது திடீரென கார் கதவுகள் லாக் ஆகிக்கொண்டது. அத்துடன் நடுவழியில் கார் என்ஜின் ஆப் ஆகி நின்றது. ஆனால் ஏன் இப்படி கார் நடுவழியில் நிற்கிறது என்பது போலீசாருக்கு தெரியவில்லை. காரை விட்டு கீழேயும் இறங்க முடியவில்லை. சுமார் 3மணிநேரம் பூட்டிய காருக்குள் சிக்கி தவித்து இருக்கிறார்கள். காரின் உரிமையாளர் வந்தபின்னரே வெளியே வந்துள்ளார்கள்.
என்ஜினை அணைத்தார்
இது தொடர்பாக உயர்அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோமதி நகர் போலீஸ் ஸ்டேஷன் உயரதிகாரியான பரமேந்திரா குமார் சிங் தனது இரண்டு காவலர்களுடன் சேர்ந்து காரை தூக்கிக்கொண்டு சென்றதை கண்ட காரின் உரிமையாளர், போலீசாரை வெகுதூரத்தில் வைத்து ஜி.பி.எஸ். வசதியால் காருக்குள் வைத்து பூட்டியுள்ளார். காரின் என்ஜினையும் அணைத்து உள்ளார்.
உயர் அதிகாரிகள் விளக்கம்
காரை தவறாக பயன்படுத்தியது குறித்து காரின் உரிமையாளர் லக்னோ போலீசாரிடம் புகாரும் அளித்திருக்கிறார். உயர் அதிகாரிகள் இந்த விவாகரத்தில் தலையிட்டு அவர்களை காரில் இருந்து மீட்டுள்ளார்கள். இனி வருங்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் உறுதி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக துணை கமிஷனர் சந்தோஷ் தெரிவித்தார்.