பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட நபர்.. அடி உதை கொடுத்த மக்கள்.. உ.பி பேரணியில் பரபரப்பு!
புல்வாமா தாக்குதலுக்கு எதிராக நடந்த ஊர்வலம் ஒன்றில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட நபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
லக்னோ: புல்வாமா தாக்குதலுக்கு எதிராக நடந்த ஊர்வலம் ஒன்றில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட நபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். தற்போது போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.
இந்த தாக்குதலுக்கு எதிராக பல இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணி ஒன்றில் பெரிய குழப்பம் நிகழ்ந்து இருக்கிறது.
யார் செய்தது
உத்தர பிரதேசத்தில் பஸ்தி என்ற பகுதியில் அந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த இந்த பேரணியில் பேகம் கார் இன்டர் காலேஜ், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
என்ன கூறினான்
இந்த பேரணியில் கலந்து கொண்ட முகமது காலித் என்ற இளைஞர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும்படி அந்த கல்லூரி பெண்களை கேட்டு உள்ளார். ஆனால் அந்த பெண்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப மறுத்துள்ளனர். இதனால், காலித் தனியாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினான்.
தாக்கினார்கள்
அதேபோல் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பி இருக்கிறான். இதையடுத்து அங்கு வந்த பாஜகவினர், உடனே காலித் மீது சரமாரி தாக்குதலை நடத்தினார்கள். 20க்கும் அதிகமான பாஜகவினர், இந்து அமைப்பினர் காலித் மீது சரமாரி தாக்குதலை நடத்தினார்கள்.
என்ன பிரிவு
இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாஜகவினரை கட்டுப்படுத்திவிட்டு, காலித்தை கைது செய்தனர். காலித் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 153ஏ, 153பி மற்றும் 505 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.