பரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நண்பனிடம் ரூ.2000 பந்தயம் கட்டி 50 முட்டைகளை சாப்பிட முயன்றவர் 41 முட்டைகளை சாப்பிட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் வயது 42.இவர் தனது நண்பரிடம் முட்டைகள் சாப்பிடுவதில் கில்லாடி என்பது போல் பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலடியாக அவரும் பேசியிருக்கிறார். அப்போது சுபாஷ் யாதவ் பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று பேசியிருக்கிறார். அவரது நண்பரும் பந்தயத்துக்கு தயார் என அறிவித்துள்ளார்.
2 ஆயிரம் பந்தயம்
சுபாஷ் யாதவ் 50 முட்டைகளை சாப்பிட்டால் ரூ.2 ஆயிரம் தருவதாக அவரது நண்பர் பந்தயம் கட்டியிருக்கிறார். ஆனால் யாதவோ தான் உயிரை விடப்போகிறோம் என்பது தெரியாமல் பந்தயத்தில் குதித்தார்.
முட்டைகளை சாப்பிட்டார்
இதன்படி இருவரும் ஜான்பூர் பிபிகான்ஜி சந்தையில் முட்டைகளை வாங்கினர். முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சுபாஷ் யாதவ் உற்சாகமாக சாப்பிட்டபடி இருந்தார்.
மயங்கி விழுந்தார்
41வது முட்டையை சாப்பிட்டு முடித்த நிலையில் சுபாஷ் யாதவ் திடீரென சரிந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இவரை ஜான்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதிக உணவு
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். அதிகப்படியாக சாப்பிட்டதால் சுபாஷ் யாதவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
2000 ரூபாய் பந்தயத்திற்காக அதிகப்படியான முட்டையை சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பரோட்டோ சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டோ சூரி ஒட்டலில் சாப்பிடும்போது 50 புரோட்டோ சாப்பிடுவதாக பந்தயம் காட்டுவார். அதில் 50 பரோட்டோ சாப்பிடுவது போல் காட்டவார்கள். ஆனால் உண்மையில் சூரி 17 பரோட்டா தான் சாப்பிட்டதாக நினைவு கூர்ந்தார். எனினும் வெண்ணிலா கபடி குழு பட பாணியில் உபியில் உயிரை பணைய வைத்து நடந்த இந்த பந்தயத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பந்தயங்கள் மிக ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.