மோட்டார் பைக் இல்லையா... முதலிரவு முடிந்த உடன் தலாக் சொன்ன கணவன்- மனைவி அதிர்ச்சி
வரதட்சணையாக மோட்டார் பைக் வாங்கித்தரவில்லை என்ற கோபத்தில் முதலிரவு முடிந்த கையோடு மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்திருக்கிறான் ஒரு கணவன். உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ: வரதட்சணையா மாப்பிள்ளை சொம்பு கேட்கறார் என்று சொல்லி வடிவேலுவிற்கு நடக்க இருந்த நிறுத்துவார் திருமண தரகர். அது நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து 24 மணிநேரத்தில் முதலிரவு முடிந்த கையோடு திருமணத்தை ரத்து செய்யும் வகையில் மும்முறை தலாக் கூறியுள்ளார் ஒரு கணவர். தனக்கு வரதட்சணையாகக் கேட்ட மோட்டார் பைக்கை வாங்கித்தரவில்லை என்பதற்காகவே தலாக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ருக்சானா பனோ என்பதாகும். இவருக்கும் சஹாஹே அலாம் என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஜஹாங்கீரபாத் பகுதியில் திருமணம் நடந்தது. சந்தோசமாக புகுந்த வீட்டிற்குப் போனார் ருக்சானா.
திருமண சடங்குகள் எல்லாமே சந்தோசமாக முடிந்து சாந்தி முகூர்த்தமும் நடந்து முடிந்தது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சீர் கொண்டு வந்தனர். பெட்டி பெட்டியாக பாத்திரங்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அனைத்தும் கொண்டு வந்து இறக்கினர். ஆனால் மாப்பிள்ளை எதிர்பார்த்த மோட்டார் பைக் மட்டும் கொண்டு வரவில்லை. அதைப்பார்த்த புது மாப்பிள்ளை அலாமிற்கு ஆத்திரம் வந்தது.
மனைவியை கூப்பிட்டு மூன்று முறை தலாக் சொன்னார் இதனால் புதுப்பெண் ருக்சானாவும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணம் முடிந்து 24 மணி நேரத்திற்குள் தலாக் சொல்லி விவாகரத்து செய்தது பற்றி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த உலகத்தில் எத்தனையோ விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, ஆனால் வரதட்சணையாக மோட்டார் சைக்கில் வாங்கித்தரவில்லை என்று கூறி 24 மணிநேரத்தில் விவாகரத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.