திருமண விருந்தில் அருவருப்பு.. எச்சிலை துப்பி தந்தூரி ரொட்டி சுட்ட சமையல்காரர் கைது!
திருமண விருந்தில் தந்தூரி ரொட்டியிலும் எச்சில் துப்பி அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் எச்சில் துப்பி துப்பி இளைஞர் ஒருவர் தந்தூரி ரொட்டி சுடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி என்றாலே அங்கு கொண்டாட்டங்களில் ஒன்றாக அறுசுவை உணவும் இடம் பிடித்து விடும். விருந்து சாப்பாடுக்கென்றே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் பலர். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் வீடியோ ஒன்றில் இடம் பெற்றுள்ள காட்சிகள், இனி தந்தூரி ரொட்டியைப் பார்த்தாலே நமக்கு வாந்தி வர வைத்துவிடும் போல.
நடுராத்திரி.. பிரிட்ஜ் மேலே நடந்த பாலியல் அக்கிரமம்.. 3 பேரிடம் சிக்கிய பெண்.. சென்னையில் ஷாக்!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் தான் இந்த அருவருக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது.
தந்தூரியில் எச்சில்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு மண்டபத்தில் வெளியில் திறந்தவெளியில் சமையல் தயார் செய்யப்பட்டுள்ளது. அப்போது தந்தூரி ரொட்டி சுட்ட சமையல்காரர் ஒருவர் ஒவ்வொரு ரொட்டியிலும் தனது எச்சிலை துப்பியுள்ளார்.
வைரல் வீடியோ
இதனை அந்த திருமணத்திற்கு வந்திருந்த யாரோ ரகசியமாக தனது கைப்பேசியில் படமாக்கியுள்ளனர். அந்த வீடியோவில், ஒவ்வொரு ரொட்டியிலும் அந்த இளைஞர் எச்சிலைத் துப்பி விட்டு பின் தந்தூரி அடுப்பிற்குள் வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. வீடியோவை எடுத்த நபர் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் உடனடியாக அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து வைரலாக்கி விட்டனர். இது தொடர்பாக இந்து ஜக்ரான் மஞ்ச் சங்கத்தினர் அந்த பகுதி காவல் நிலையத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சமையல் இளைஞரைக் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை
அதனைத் தொடர்ந்து வீடியோவில் இருந்த திருமண மண்டபத்திற்கு சென்ற போலீசார், எச்சில் துப்பிய சமையல்காரர் பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் சோகைல் என்பதும் தெரிய வந்தது. உடனடியாக சோகைலைக் கைது செய்தனர். என்ன காரணத்திற்காக சோகைல் அப்படி ரொட்டிகள் மீது எச்சில் துப்பினார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருவருப்பு
இந்த வீடியோவைப் பார்க்கும் போதே நமக்கு அருவருப்பாக இருக்கிறது. கொரோனா பரவலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நாம், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக புதிய இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி எண்ணாமல் இப்படி எச்சிலைத் துப்பி ரொட்டி தயாரிக்க அந்த இளைஞருக்கு எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை.