உடல் தகுதியில்லையா வீட்டுக்கு அனுப்பு... போலீசுக்கு கட்டாய ஓய்வு.. உபி அரசு அதிரடி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தகுதியான உடல் கட்டோடு இல்லையென்றால் அவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பி வருகிறது யோகி அரசு.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆண்டுவருகிறது. யோகி முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விமர்சனங்களும், குற்றசாட்டுகளும் அவர் மீது வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் உடல் தகுதி இல்லாத போலீசாரை வீட்டுக்கு அனுப்ப யோகி அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் உடல் தகுதி இல்லாத போலீசாரை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. அதன்படி 7 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 போலீஸ்காரர்கள் என மொத்தம் 25 பேர் உடல் தகுதியோடு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் குறித்த தகவல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவரது அவரது அறிவுறுத்தலின்பேரில், உடல் தகுதி இல்லையென அடையாளம் காணப்பட்ட 25 பேருக்கும் கட்டாய ஓய்வு வழங்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த கட்டாய ஓய்வு குறித்து உபி மாநில காவல்துறை டி.ஐ.ஜி. ராஜேஷ் குமார் பாண்டே கூறுகையில் “முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின் அடிப்படையில் உத்தரபிரதேச போலீஸ் சட்டத்தின் 56-வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதன் காரணமாக, ஓய்வளிக்கப்பட்ட போலீசாரின் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படாது, அவர்களுக்கு 3 மாத சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும். கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள 25 பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், ஒழுங்கீனம் தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது நிலுவையில் உள்ளது" இவ்வாறு டி.ஐ.ஜி. ராஜேஷ் குமார் பாண்டே நேற்று தெரிவித்தார்.