அனைத்துக்கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி... பிரதமர் மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு!
லக்ணோ: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் பிரச்னைகளை திசை திருப்பும் செயல் என்று பிரதமர் மோடி மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்ற கொள்கையுடன் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
தவிரவும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் மற்றும் 2022ம் ஆண்டு நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தை காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்குதேசம் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்!
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்கவில்லை. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் வன்முறை தலைதூக்கி விட்டன.
இந்த பிரச்னைகளிலிருந்து மக்களின் திசை திருப்புவதற்காக ஒரே தேசம், ஒரே தேர்தல் கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தேன்.
வாக்குப் பதிவு எந்திரங்கள் மீதான நம்பகதன்மை குறைந்துவிட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக்கட்சி கூட்டமாக இருந்திருந்தால், நிச்சயம் கலந்து பங்கேற்றிருப்பேன்," என்று கூறி இருக்கிறார்.