அமேதி, ரேபரேலியில் ராகுல், சோனியாவுக்கு ஓட்டுப் போடுங்க... மாயாவதி வேண்டுகோள்
லக்னோ: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவை நாளை எதிர்கொள்ளும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அவரது தாயார் சோனியா காந்திக்கு தமது கூட்டணி கட்சி தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி - ராஷ்டிரிய லோக் தள் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி இடம்பெறவில்லை.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இந்த மெகா கூட்டணி கடுமையாக விமர்சித்து வருகிறது. அதேநேரத்தில் காங்கிரஸோ இக்கூட்டணியுடன் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, மெகா கூட்டணிக்காகவே வலிமையான வேட்பாளர்களை சில இடங்களில் நிறுத்தவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ரேபரேலி, அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர்களான சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு தமது கூட்டணியினர் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடிச் சாமிக்காக காவி வேட்டி அணிந்த ஓபிஎஸ்.. ஆளுநர் பதவியை பெற திட்டம்.. தங்கதமிழ்ச் செல்வன் பரபர
இது தொடர்பாக கூறிய மாயாவதி, காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அதனால் எங்களது கூட்டணி அமேதி, ரேபரேலியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்.
இதுவரை நடைபெற்ற வாக்குப் பதிவுகள் எங்கள் மெகா கூட்டணிக்கே சாதகமாக இருக்கின்றன. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. எங்களது கூட்டணி நாட்டின் புதிய பிரதமர், புதிய அரசை மட்டும் உருவாக்கப் போவதில்லை. மாநிலத்திலும் புதிய அரசை ஏற்படுத்துவோம் என்றார்.