காலத்தின் கோலம்.. முலாயமுக்கு வாக்கு கேட்கும் மாயாவதி.. இரு பெரும் எதிரிகள் ஒரே மேடையில்!
லக்னோ: இரு பெரும் அரசியல் எதிரிகளான முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் ஏறவுள்ளனர். முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாக மாயாவதி வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த முக்கியமான மாநிலங்களில் முதன்மையான மாநிலம் உத்திரப்பிரதேசம். 80 மக்களவைத் தொகுதிகள் இம்மாநிலத்தில் உள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் 70 இடங்களை பாஜக பெற்று சாகசம் புரிந்ததால்தான் மிருகபலத்தோடு மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் பாஜகவின் அடித்தள அஸ்திரங்கள் அனைத்தும் நிறைந்த மாநிலமும் இதுவேதான்.
கங்கையாக இருக்கட்டும், அயோத்தியாக இருக்கட்டும் அனைத்தும் இந்த மாநிலத்திலேயே இருக்கின்றன. அதனாலேதான் கடந்த முறை உ.பி யில் உள்ள வாரணாசி. குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய தொகுதிகளில் வென்ற மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதேதராவை கைகழுவிவிட்டு வாரணாசியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வரும் மக்களவைத் தேர்தலிலும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிட உள்ளார் மோடி.
திமுக அதிமுக மாதிரி
இப்படிப்பட்ட மாநிலத்தில்தான் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அஜண்டாவோடு இருபெரும் எதிரிகள் கை கோர்த்துள்ளனர். அதாவது நம்மூரில் எப்படி திமுக, அதிமுகவோ அதுபோல உ.பி. யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சியும். இரு கட்சிகளும் இரு துருவங்கள். இப்படிப்பட்ட நிலையில் இரு கட்சிகளும் இப்போது கை கோர்த்து தேர்தலை சந்திக்க உள்ளன.
மோதல் வரலாறு
இவர்களின் கட்சி இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது அதற்கு பின்னர் ரத்தக் களரியும் ஆனது. அந்த வரலாற்றை சற்று திரும்பி பார்த்தோம் என்றால் (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே) 1995-ம் ஆண்டு முலாயம் சிங் முதல்வராக இருந்தார். முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்து வந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் மாயாவதி திடீரென முலாயம் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார். அப்போது லக்னோவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார் மாயாவதி.
கடந்த காலம்
அந்த விடுதியை முற்றுகையிட்ட சமாஜ்வாடி தொண்டர்கள் அந்த விடுதியை அடித்து நொறுக்கினர். அதன் பின்னர் மாயாவதி தன்மீது சமாஜ்வாடி கட்சியினர் கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர் இதற்கு முலாயம்சிங் தான் காரணம் என பேட்டி தட்டினார். விடுவார்களா பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் ? மாநிலமெங்கும் இரு கட்சி தொண்டர்களும் மாறி மாறி மோதிகொண்டனர். அதற்கு பிறகே இரு கட்சிகளும் எதிரும் புதிருமாகவே அரசியல் நடத்தி வந்தன.
சந்தில் சிந்து பாடிய பாஜக
இவர்களின் இந்த சண்டை பாஜகவுக்கு வசதியாக போய்விட்டது. கடந்த 2014 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 70/80 என்று பெருவெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாமல் அதிரி புதிரி செய்து ஆட்சியை பிடித்தது. (இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் மாநிலம் உ.பி) இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவுக்கு அணை கட்ட உ.பி யின் இருபெரும் எதிரிகள் ஒன்றினைந்துள்ளனர்.
அகிலேஷ் யாதவ் உத்தி
சமாஜ்வாடி இப்போது முலாயம்சிங்கின் ஆதிக்கத்தில் இல்லாமல் அகிலேஷ் யாதவின் கட்டுப்பாட்டில் இருப்பதுவும் இவர்களின் இணைப்புக்கு ஒரு காரணம். இந்த இணைப்புக்கு பிறகு இருவரும் மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளை சமமாக பங்கிட்டு கொண்டவர்கள் காங்கிரசுக்காக இரு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் உள்ளனர். தேர்தல் பணிகள் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் உ.பி யின் மெயின்புரி தொகுதியில் முலாயம்சிங் போட்டியிடுகிறார்.
பிரச்சாரம் செய்யும் மாயாவதி
தலித் வாக்கு வங்கி நிறைந்த இந்த தொகுதியில் முலாயம்சிங் யாதவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே வரும் 19 ம் தேதி மெயின்புரி தொகுதியில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் முலாயம்சிங்கை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார் மாயாவதி. சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு பரம வைரிகளான இருவர் இந்த தேர்தலில் கை கோர்த்துள்ளது இந்திய அரசியலில் பெரும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா .