தலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா? உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு
லக்னோ: தலித்துகள் பட்டியலில் மேலும் 17 ஜாதிகளை சேர்க்கும் உத்தரப்பிரதேச அரசின் முடிவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்துத்துவா கொள்கையை பேசியும் இடஒதுக்கீடு முறையையும் எதிர்த்தும் கலகம் செய்து வந்தது பாஜக. ஆனால் தற்போது விதம் விதமான இடஒதுக்கீடு முறைகளை அறிவித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே வசிப்போருக்கு 10% இடஒதுக்கீடு அறிவித்துள்ளது.
முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் முற்படுத்தப்பட்டோரில் 10% இடஒதுக்கீடு என அறிவித்து லோக்சபா தேர்தலில் பெரும் அறுவடையை செய்து காட்டியது பாஜக. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அதிரடியாக தலித்துகள் பட்டியலில் மேலும் 17 ஜாதிகளை சேர்க்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
ஜெ. மரணம்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் 4 வாரம் விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 17 ஜாதிகளை நீக்கி அவற்றை தலித்துகள் பட்டியலில் சேர்ப்பது என முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 341-வது பிரிவின் படி தலித்துகள் பட்டியலில் ஜாதியை சேர்ப்பதும் நீக்குவதும் முடியாத ஒன்று. அப்படி செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும்.
அப்படியே தலித்துகள் பட்டியலில் ஜாதிகளை சேர்ப்பதற்கும் நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறதே தவிர மாநில முதல்வருக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு மாயாவதி கூறினார்.