டெல்லியில் இருந்து 1,000 கி.மீ சைக்கிள் பயணம்..பீகார் நோக்கி சென்ற கூலிதொழிலாளி கார் மோதி பரிதாப பலி
லக்னோ: லாக்டவுனால் டெல்லியில் இருந்து பீகார் நோக்கி சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பீகாரை சேர்ந்த ஷகீர் அன்சாலி டெல்லியில் பணிபுரிந்து வந்தார். லாக்டவுனால் வேலையிழந்த ஷகீர் அன்சாரியும் அவரது நண்பர்கள் 7 பேரும் சைக்கிளில் சொந்த மாநிலமான பீகாருக்கு செல்ல முடிவெடுத்தனர்.
சுமார் 1,000 கி.மீ. தொலைவாக இருந்தாலும் எப்படியும் சைக்கிளில் சென்றடைந்துவிடலாம் என திட்டமிட்டு மே 5-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டனர். இந்த கூலி தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று லக்னோ வரை வந்துவிட்டனர்.
சனிக்கிழமை காலையில் சாலை ஓரத்தில் அமர்ந்து காலை உணவை ஷகீரும் அவரது நண்பர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வேகமாக வந்த கார் ஒன்று ஷகீர் மீது மோதி தூக்கி வீசியது.
இதில் படுகாயமடைந்த ஷகீரை அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஷகீர் உயிரிழந்துவிட்டார். ஷகீருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய காய்கறி சந்தை- இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது
லக்னோவை சேர்ந்த தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் ஷகீரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் சென்ற கூலி தொழிலாளி தம்பதியினர் லக்னோ அருகே வியாழக்கிமை உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியதும் குறிப்பிடத்தக்கது.