லாரி நிறைய பிணங்கள்.. சடலங்களுக்கு நடுவே.. திக் திக்கென உயிரை கையில் பிடித்து.. தொழிலாளர்கள்.. ஷாக்
லாரியில் பிணங்களுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணமானார்கள்
லக்னோ: லாரி நிறைய பிணங்கள்.. அந்த சடலங்களுடனேயே புலம்பெயர் தொழிலாளர்கள் திக் திக்கென உயிரை கையில் பிடித்து கொண்டு, சொந்த ஊர் போய் சேர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடெங்கிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்கள் கூடிக் கொண்டே போகின்றன.. இப்படி சொந்த ஊருக்கு செல்லும்போது ஏராளமான இன்னல்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். யாரிடமும் காசில்லாததால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஒருசிலர் கால்நடுக்க நடந்தும் முடியாமல் போய், கிடைக்கும் வாகனங்களிடம் உதவி கேட்டும் சென்று வருகிறார்கள். இப்படி சோறு, தண்ணி இல்லாமல் இவர்கள் நடந்து செல்லும்போது, விபத்திலும் சிக்கி உயிரிழப்பது அதைவிட கொடுமையாக உள்ளது.
நிதி விஷயத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது.. கேசிஆர் ஆவேசம்
பீகார்
அந்த வகையில், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போவதற்காக ஒரு லாரியில் கிளம்பி உள்ளனர்.. உத்தர பிரதேசத்தின் அவ்ராயா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு லாரியானது, இந்த தொழிலாளர்கள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
படுகாயம்
இதில், 26 தொழிலாளர்கள் அங்கேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மீதம் 15க்கும் மேற்பட்டோர் உடம்பெல்லாம் படுகாயமடைந்து ரத்தம் கொட்டி, ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டப்பட்டன.. அவைகளை திறந்தவெளி லாரியில் போட்டனர்.
பிணங்கள்
பிறகு அதே லாரியில் விபத்தில் சிக்கியவர்களையும் அவ்ராயா நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.. பிணங்களோடு பிணங்களாக, இந்த தொழிலாளர்கள் பயணமாகி உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் வழியில் இது சம்பந்தமான போட்டோக்களும் எடுக்கப்பட்டு, அவை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி
அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இதை மனிதாபிமானமற்ற ஒரு செயல், விபத்தில் சிக்கியவர்களையும், அதில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் தகுந்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் உத்தரபிரதேச, பீகார் அரசுகள் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளார். இதையடுத்து, இறந்தவர்கள் உடல்கள் ஆம்புலன்ஸிலும், காயமடைந்தவர்களை வேறு டிரக்குகளிலும் அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.