மனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியை நடு ரோட்டில் வைத்து கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற நபரை அந்த ஊர் மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிசார் குரேஷி வயது 40. இவரது மனைவி அப்சாரி(35). இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நிசார் குரேஷி தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.
கோடாரியால் கொலை
தடுக்க வந்த இரண்டு பெண்களையும் அவர் பயங்கரமாக தாக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றவரை 100க்கும் மேற்பட்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளது. ஊர்மக்கள் நடுரோட்டில் வைத்து குரோஷியை கட்டைகளால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதை அந்த மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
கடும் தண்டனை
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் உத்தரப்பிரதேச டிஜிபி ஒம் சிங் அமேதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நிச்சயம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கும்பல் வன்முறை என்பது மோசமான தவறு என்று விமர்சித்தார்.
வீடியோவை பார்த்தனர்
இதனிடையே காஜீபூர் காவல் நிலையத்தில் குரேஷியின் சகோதரர் இஸ்பாக் தனது அண்ணனை 100 முதல் 150 பேர் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குரேஷியின் சகோதரரிடம் இருந்த வீடியோவை வாங்கி அதில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
மற்றவர்களை தேடும் பணி
இந்த மரணம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஃபதேபூர் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.
மருத்துவர் தகவல்
இந்நிலையில் குரேஷியின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் கூறுகையில், குரேஷியின் தலை மற்றும் வாயில் படுகாயம் ஏற்பட்டதாகவும், குரேஷியின் பல எலும்புகள் முறிந்துவிட்டது என்றும் கூறினார். இந்த கும்பல் வன்முறை சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.