வன்முறை வெடித்தது.. லக்னோவில் இண்டர்நெட்.. எஸ்எம்எஸ் சேவைகள் முழுமையாக துண்டிப்பு
Recommended Video
லக்னோ: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியதால் மொபைல் இணையசேவை, எஸ்எம்எஸ் சர்வீஸ் உள்ளிட்டவை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அத்துடன் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அந்த மாநில போலீஸ் அறிவித்துள்ளது.
லக்னோவில் மாதேகஞ்ச் பகுதியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் விரட்டி அடித்தனர். அப்போது நடந்த வன்முறையில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
லக்னோவில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் முகமது வகீல்(25) என்ற இளைஞர் உயிரிழந்தார். 112 பேர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.
போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் லக்னோவில் மொபைல் இணையசேவை, எஸ்எம்எஸ் சர்வீஸ் உள்ளிட்டவை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. டிச 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு துண்டிக்கப்பட்ட இணையசேவை வரும் டிசம்பர் 21ம் தேதி பிற்பகல் 12 மணிவரை (நாளை வரை) நிறுத்திவைக்கப்படும் என்றும் அதன்பிறகே இணையசேவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் குமார் அவஸ்தி அறிவித்துள்ளார்.