கொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடிய பெண் ஒருவர் தனது 6 வயது மகளை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நிதி நெருக்கடி, குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் வறுமையில் சிக்கித் தவித்த பெண் ஒருவர் தனது 6 வயது மகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண் குழந்தைகள் பிறந்த உடனே கொலை செய்யப்படும் சம்பவம் இன்றும் பல மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் வறுமையின் பிடியில் சிக்கிய பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்து விட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உஷா தேவி என்பதாகும். கொரோனா காலத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பலரும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த பெண்ணின் குடும்பமும் வறுமைக்கு தப்பவில்லை.
கணவன் நோயில் விழா உஷா தேவியின் வருமானத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கணவர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஐந்து பேரின் பசியை போக்க பகீரத பிரயத்தனம் செய்தும் வருமானம் போதவில்லை. பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டது.
பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு என்ன செய்வது? எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று நினைத்து கலங்கினார் உஷா தேவி. மனதை கல்லாக்கிக்கொண்டு மகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதி விட்டார் உஷா தேவி.
டெல்லியில் டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி இழுத்துச்சென்ற டிரைவர் கைது - வைரல் வீடியோ
இந்த சம்பவம் ஹேண்டியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெஸ்கி கிராமத்தில் நடந்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் அந்த பெண், வறுமையால் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் கூறியுள்ளனர். மகளை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இப்போது குடும்பத்தில் 3 பேர் பசியோடு தவித்து வருகின்றனர்.