உ.பி. தேர்தல்: அகிலேஷுக்கு பதிலடி- முலாயம்சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர்.
காளையை அடக்கினால் ஜாக்பாட்! ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை?என்ன சொல்கிறார் அமைச்சர்-முக்கிய தகவல்
வேட்பாளர்கள் அறிவிப்பு
உ.பி. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள், பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளியிட்டுள்ளன. பிப்ரவரி 10, பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறும் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்களுக்கான 107 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில் 20 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எஞ்சிய 296 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக விரைவில் அறிவிக்க உள்ளது.
கோரக்பூரில் யோகி போட்டி
முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என விவாதம் நடந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அயோத்தி சட்டசபை தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என கூறப்பட்டது.
ஓபிசி சமூகம்
சர்தானா- சங்கீத் சோம், மீரட்- அமித் அகர்வால், நொய்டா- பங்கச் சிங், சாகிபாபாத்- சுனில் வர்மா, ஹஸ்தினாபூர்- தினேஷ் கர்திக், மௌலான- தர்மேஷ், சிராத்து- கேஷப் மவுரியா, ஆக்ரா - பேபி ராணி மவுரியா, காசியாபாத்- அப்துல் கார் ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ஓபிசி சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பாஜகவில் முலாயம்சிங் மருமகள்
யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி பாஜகவில் இணைந்தவர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான். அதனை சரிகட்டும் வகையில் ஓபிசி சமூகத்தினருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங்கின் மருமகள் அபர்னா யாதவ், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முலாயம்சிங் யாதவின் இளைய மகனும் அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதிக் யாதவின் மனைவிதான் அபர்ணா யாதவ். 2017 சட்டசபை தேர்தலில் லக்னோ கண்டோமென்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அபர்ணா. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவும் நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகளை பாஜக , கட்சியில் சேர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.