கும்பல் வன்முறை- தற்காத்து கொள்ள துப்பாக்கி உரிமம்... முஸ்லிம் மத குரு கருத்தால் சர்ச்சை
லக்னோ: பசுபாதுகாப்பு குண்டர்கள் உள்ளிட்ட கும்பல் வன்முறையாளர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடிகள் துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு கால்பே ஜாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கும்பல் வன்முறையாளர்களால் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூன் 18-ந் தேதியன்று தப்ரேஸ் அன்ஸாரி என்ற முஸ்லிம் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டார், பீகாரில் ஜூலை 2-ல் திருட்டு குற்றம் சாட்டி கும்பல் வன்முறையாளர்களால் இளைஞர் கொல்லப்பட்டார்.
அதே பீகார் மாநிலத்தில் ஜூலை 19-ந் தேதி கன்றுகுட்டிகளை திருடியதாக கூறி 3 பேரை ஒரு கும்பல் அடித்தே கொலை செய்தது. இச்சம்பவங்களால் தலித்துகள், முஸ்லிம்கள் இடையே ஒரு வித அச்சநிலை உருவாகி உள்ளது.
ஒடுக்கப்பட்டோருக்கு ஆயுத உரிமம்
கும்பல் வன்முறையாளர்களை ஒடுக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலித்துகள், பழங்குடிகள் மற்றும் முஸ்லிம்கள் சட்டத்துக்குட்பட்டு துப்பாக்கி உரிமங்களை எப்படி பெறுவது என்பதற்காக பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என உத்தரப்பிரதேசத்தின் ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு கால்பே ஜாவத் அறிவித்திருந்தார்.
12 முகாம்கள்
ஜாவத்தின் வழக்கறிஞரான மெக்மூத் பிரச்சா இது குறித்து கூறுகையில், உத்தரப்பிரதேசத்தின் 6 நகரங்கள் உட்பட மொத்தம் 12 இடங்களில் துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். ஏனெனில் கும்பல் வன்முறையாளர்கள் மீது அரசு மென்மை போக்கை காட்டுகிறது. அரசால்தான் இத்தகைய நிலைமை உருவாகி உள்ளது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
ஆயுத பயிற்சி அல்ல
துப்பாக்கி உரிமம் கோருவது எப்படி என்கிற முகாம்களில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விளக்கம் அளித்துள்ள மதகுரு ஜாவத், துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிப்பது எப்படி? என்கிற பயிற்சி முகாம்களை ஒத்திவைக்குமாறு வழக்கறிஞர் பிரச்சாவிடம் கூறியுள்ளேன்.
அரசு நடவடிக்கை அவசியம்
நாங்கள் அறிவித்த முகாம்களில் ஆயுத பயிற்சி அளிக்கப்படும் என கூறியதாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகி இருக்கின்றன. யாருக்கும் ஆயுத பயிற்சி கொடுக்கப் போவது இல்லை. அது தவறானது. கும்பல் வன்முறைகளை தடுக்க அரசு உரிய சட்டம் இயற்றி நடவடிக்கை எடுத்தாலே போதும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும் என கூறியுள்ளார்.