இதுதாங்க மத நல்லிணக்கம்.. இந்து கைதிகளுடன் நவராத்திரி விரதம் இருக்கும் முஸ்லீம் கைதிகள்..உபியில் தான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இந்து கைதிகளுடன் இணைந்து முஸ்லீம் கைதிகளும் நவராத்திரி விரதம் இருந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி திருவிழா வட இந்திய மாநிலங்களில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி திருவிழாவின் போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.
வெடித்து சிதறிய தலை.. கல்வியை கொல்லாதீங்க.. ஆப்கன் குண்டுவெடிப்பால் ரஷீத் கான் உருக்கம்.. என்னாச்சு
நவராத்திரி பண்டிகை
இதிலும் நவராத்திரி விழாவின் கடைசி 3 நாட்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாகக் கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.
மத ஒற்றுமைக்கு அடையாளமாக
அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான நவராத்திரி பண்டிகை கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி வருகிற 5-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மத ஒற்றுமைக்கு அடையாளமாக உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகள் இந்துக் கைதிகளுடன் இணைந்து நவராத்ரி விரதத்தை கடை பிடித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இச்செயல் நெகிழ்ச்சி அடையசெய்துள்ளது.
முஸ்லீம் கைதிகளும் விரதம்
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது:- உத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் சிறையில் சுமார் ஆயிரம் இந்துக்கைதிகள், 218 முஸ்லீம் கைதிகள் என மொத்தம் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நவராத்ரி பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இந்துக் கைதிகள் விரதம் இருந்தனர். இந்துக்களுடன் இணைந்து முஸ்லீம் கைதிகளும் விரதத்தை கடைபிடித்தனர். ஏற்கனவே ரம்ஜான் பண்டிகையின் போது இந்து கைதிகள் நோன்பு இருந்தனர். தற்போது முஸ்லீம் கைதிகள் விரதம் கடைபிடிக்கின்றனர்'' என்றார்.
வேறுபாடு இன்றி ஒன்றாகவே இருக்கிறோம்
நவராத்ரி விரதம் இருந்து வரும் முஸ்லீம் கைதி ஒருவர் கூறுகையில், ''ஒற்றுமையை கடைபிடிக்கும் வகையில் நாங்கள் இப்படி செய்கிறோம். சிறைச்சாலைகளில் கடைபிடிக்கப்படும் மத நல்லிணக்கத்தை மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். சிறையில் அனைவருமே வேறுபாடு இன்றி ஒன்றாகவே இருக்கிறோம்" என்றார்.