2013ம் ஆண்டு நிகழ்ந்த முசாபர்நகர் கலவரம்… 7 பேருக்கு ஆயுள் தண்டனை
லக்னோ:முசாபர்நகரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாமிலி மற்றும் முசாபர்நகர் மாவட்டங்களில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதால் கலவரம் மூண்டது.
அந்த கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர். கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்த, நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப் பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின.
இதையடுத்து அவர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கலவரத்தின்போது, நிகழ்ந்த வன் முறையில் பெண்கள் பலர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். திருட்டு, கொலை என பல்வேறு நாச வேலைகளால் முசாபர் நகரில் அமைதி சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.