காந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
லக்னோ: காந்தி மற்றும் நேரு ஆகிய இருவரையும்விட சுபாஷ் சந்திர போஸ் மிகவும் பிரபலமானவர் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் சுபாஷ் சந்திர போஸ். பிரிட்டிஷாரை அகிம்சை வகையில் வெற்றிபெற முடியாத என்று நம்பிய போஸ், இதற்காக ராணுவத்தையும் கட்டமைத்தார். இந்தியாவின் முதல் ராணுவமாக இது பார்க்கப்படுகிறது.
சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிசாவின் கட்டக் நகரில் பிறந்தவர், இவரது 125ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் போஸின் சாதனைகளைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற போஸ் பிறந்த நாள் பேரணியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "காந்தியும் சரி, நேருவும் சரி சபாஷ் சந்திர போஸ் அளவுக்கு மக்களிடையே புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை. எனக்கு என்னவோ காங்கிரஸ் கட்சிதான் போஸை கொன்று விட்டார்கள் என்ற சந்தேகம் உள்ளது" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறமாட்டோம்... தமிமுன் அன்சாரியின் மஜக தீர்மானம்
சுதந்திரத்திற்காகப் போராடிய போஸ், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து 2017ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும் மத்திய அரசு இதே பதிலைக் கூறியது. இருப்பினும், போஸ் அந்த விமான விபத்தில் சாகவில்லை என்றும் அவர் சோவியத் யுனியனுக்கு தப்பிச் சென்று, இறுதிக்காலம் வரை அங்கு வாழ்ந்ததாகவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.